Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 21 (2544 - 2644)
திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 21 (verses 2544 - 2644)
tiruppazacaip patirRRuppattantAti
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S..Karthikeyan and V.S. Kannan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 21
திருப்பழைசை[1]ப் பதிற்றுப்பத்தந்தாதி.


[1] பழைசை - பட்டீச்சரம்; இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது.

சிவமயம்.

அழகியவிநாயகர் துதி.



2544 - ஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்
        பெருமா னிறையருட்குப்,
பாங்குபெறுவா னொருபதிற்றுப்
        பத்தந் தாதி யுரைசெய்ய
வாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்
        வாயைங் கரத்தலங்க,
டாங்கு சோதிக் குணப்பெருங்குஞ்
        சரக்கன் றடிகடலைக்கொள்வாம். - 1


நூல்.



2545 - பூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்
        றுயில்வோனும்,
நாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்
        பழைசை நாயகனே,
தேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்
        கருத்தி லிருத்தேற்கு,
மாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா
        னின்பே ரருட்கழகே. - 1



2546 - அழகா ருமையோர் பங்குடையோ யமர
        ரேத்துந் திருப்பழைசைக்,
குழகா கொன்றை முடிமிலைந்த கோமா
        னேநின் னடியரொடும்,
பழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி
        யேனைப் பவமென்னுந்
தழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்
        கொள்ள றக்கதே. - 2



2547 - தக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்
        கூற்றந் தனைவதைத்தாய்,
செக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்
        கொழுந்தோடரவணிந்தாய்,
முக்க ணுடையாய் திருப்பழைசை
        முதல்வா நின்றாட்கன்பில்லாப்,
பொக்க முடையே னானாலும்
        போற்றிக் கோடல் கடுனனக்கே. - 3



2548 - கடங்கால் பொருப்பி னுரிபோர்த்தாய்
        கண்ணார் நெற்றிப்புண்ணியனே,
விடங்கா லரவ மரைக்கசைத்த
        விடங்கா தடங்கணுமைபாகா,
தடங்கா மருவுஞ் செழும்பழைசைத்
        தலைவா பல நாணினைப்புகழா
தடங்கா வுள்ளம் பொறிவழியே
        யணுகத் திரிந்தேணுறவுள்ளே. - 4



2549 - உள்ளம் பொறியின் வழிநடையுற்
        றோடச் சுழன்றுமடமாதர்,
கள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே
        னாகித் திரிவேனைத்,
தெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து
        பணியப் பணித்தாண்டான்,
பள்ளவயற்கண் வளைமுத்தீன்
        பழைசைப் பதிவாழ் பெருமானே. - 5



2550 - மானேர் நோக்கி யொருபாகா மறைவாய்
        முழக்க நிறைபழைசைக்,
கோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா
        முக்கட்கொழுக்கரும்பே,
தேனே கனியே யன்பருளந் தித்தித்
        திருக்குந்தெள்ளமுதே,
வானே பெறினும் யானின்றாள்
        வழுத்து மன்பின்மாண்பருளே. - 6



2551 - மாணா வுள்ளப் பறவைமட
        மானார்மையற் கண்ணிவிழ,
நாணா துழன்று தடுமாறி நவவாய்ப்
        புழுக்கூ டதுசுமந்து,
வீணாள்கழிக்கு மறிவில்லேன் மெய்யா
        பழைசை யையாநின்,
பூணார் மலர்த்தாண் முடிக்கணிந்து
        புகழப் பெறுநா ளெந்நாளோ. - 7



2552 - என்னா யகனை விண்ணவருக் கிறையா
        யவனை மறைநான்கு,
முன்னா நிற்கும் வடிவானை மூவா
        தானை மூத்தானைப்,
பொன்னார் மேனிப் புய்லும்விரைப்
        பூந்தா மரைவே தனுநாடிப்,
பன்னாடிரிந்துங் காணானைப்
        பழைசை நகரிற் கண்டேனே. - 8



2553 - கண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்
        முடங்குமறிவிலிவாய்த்,
தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந்
        தன்மையெனக்கண் டுளங்களிப்புக்,
கொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்
        குளித்தேன் முகமலர்ந்தேன்,
விண்டேன் பண்டை வினைக்கடலை
        வேண்டேன் மற்றைத் தேவரையே. - 9



2554 - வரைமா திருக்கு மொருகூறு மழுமா
        னணிந்த திருக்கரமு,
மரைசேர் வேங்கை யதளுடையு மரவா
        பரணத் தகன்மார்பும்,
விரைசேர் கொன்றை முடியுமரை
        மேவுமடியும் வெளித்தோற்றி,
நரைசேர் விடையான் றிருப்பழைசை
        நகரி லருளப் பெற்றேனே. - 10



2555 - வேறு.
பெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்
        பெய்வளைகூறானைச்,
சுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்
        சுந்தரப் பெருமானை,
யற்ற மின்மதி முடியனைப் பொடியணி
        யையனைக் கரங்கூப்பிப்,
பற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்
        பவக்கடல் கடந்தாரே. - 11



2556 - கடத்த யானையின் சருமமே யங்கக
        பாயெனக் கொண்டானைப்,
படத்த ராவணி புயத்தனை நயத்திருப்
        பழைசையம் பதியானை,
நடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின
        நாடுவா ரெவரேனும்,
வடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்
        வாழ்த்தவீற் றிருப்பாரே. - 12



2557 - இருப்பை நேரும்வன் னெஞ்சனாய்
        மானமி லீனனாயெழிலாரும்,
மருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்
        வைத்துழன் றலைவேனைக்,
கருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்
        கண்ணிசூட்டிடச்செய்தான்,
பொருப்பை வாங்கிய புராதனன்
        பழைசைவாழ்புண்ணியப் பெருமானே. - 13



2558 - பெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்
        பெருங்கலந் தகர்ந்தோடத்
திருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்
        திறந்துணச் செயலின்றிக்,
கருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்
        கனிதருசெந்தேறல்,
பருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்
        பரம்பரன் விளையாட்டே. - 14



2559 - ஆட்ட மன்றிடைச் செய்பவன்
        பழைசைவா ழந்தணனந்தாத,
நாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய
        நண்ணியஞ் சலிப்பாரே,
வாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து
        வானிடைப் புகுந்தாங்கு,
வேட்ட போகமுந் துய்த்துப்பின்
        சிவபுர மேவிநன் குறைவாரே. - 15



2560 - வாரு லாமுலை மாதர்பா லாதரம்
        வைத்துழன் றலைவீர்காள்,
தேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்
        திருப்பழைசையிற்சென்றே,
காரு லாமணி கண்டனைக் கண்டுகண்
        களிப்புறத்தொழுதன்னா,
னேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ
        ரெழுபிறப் பறுமாறே. - 16



2561 - மாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை
        மதியிலா மடநெஞ்சே,
தாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்
        சார்ந்துசந்தனக்கொங்கை,
கூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை
        குவித்துக்கண் ணீர்வார,
நீறுகொண்டணிந் துருகிலை யெங்ஙன
        நிறையருள் பெறுவாயே. - 17



2562 - வாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்
        வணங்கவு மடங்காச்செந்,
தீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்
        செய்தவமுனமில்லேன்,
பேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்
        பிறைமுடிப் பெம்மானிற்,
றோயு மாறினி நின்னடிக் காம்பவந்
        தோன்றிடவருள்வாயே. - 18



2563 - அரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,
முரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,
விரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்
பணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே. - 19



2564 - தான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த,
ஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,
கானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,
ஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ. - 20



2565 - வேறு.
அருவரை யேய்க்குங் குஞ்சரவுரித்தா
        ரமுதொழு கியமதி முடித்து,
மருவிய வரிண மழுவணி கைத்து
        மாண்டசெஞ் சூட்டகிப் பூட்டு,
கருநிற வேனங் காணருந் தாட்டுக்
        கனலவிர் மத்தகக்கட்டு,
தருவடர்பழைசை யென்னவென் னுளத்துஞ்
        சார்ந்தினி திருந்தபே ரொளியே. - 21



2566 - ஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு
        மொழுகுமுக் கடத்தகுஞ் சரத்தை,
அளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட
        வொருமுடச் சிறுவன்,
தெளிவுற நினைத்த தேய்க்குமாலடியேன்
        சிற்றறிவா னின்றன் பெருஞ்சீர்,
களியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்
        பழசையம் பரனே. - 22



2567 - அம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்
        டொடுமுழு வெலும்பு,
வெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்
        விரும்புமூண் வெய்யவெங் காளம்,
பம்புவெம் பேய்கள் படையெனி னருளார்
        பட்டிலிங் கேசனைப் பழிச்சு,
மும்பர்தம் பிரானை மண்ணுல கடியா
        ருற்றுநின் றேத்தலெவ் வாறே. - 23



2568 - எவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்
        திந்திரி யச்சுற வரித்துக்,
கவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்
        கதறுவேற் கின்னருள் புரிந்தான்,
மவ்வலங் கோதை தன்னையோர் பாகம்
        வைத்தவன் பட்டிலிங் கேசன்,
தெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்
        சிரித்தவன் றேவர்தம் பிரானே. - 24



2569 - தேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா
        செப்பரு மொப்பினின் குணங்கள்,
தாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்
        சரணடைந்தேனலேன் றோலுந்,
தீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்
        செறிமுடைத் தலைகளு நமக்கே,
யாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு
        மதிசயங் கண்டடைந் தேனே. - 25



2570 - ஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்
        திடுமொலி யெழுகட லடைக்கும்,
வானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்
        வாழ்த் தொலிமுகின் மாற்று,
மானமா முனிவர் மறைமுழக் கொலியெண்
        மாச்செவி களைச்செவி டாக்கும்,
ஞானநா யகனைப் பழசையிலடியே
        னாவழுத் தொலியெங்குப் புகுமே. - 26



2571 - எங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற
        தெடுத்துரை யாடிவீற் றிருப்பார்,
செங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்
        சிந்திப்பா ரவையெலா முணரேன்,
பொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்
        புகுந்தன னென்மன மலையுங்,
கொங்குலா மிதழிப் பட்டிலிங்கேசா
        குழைத்தெடுத் தாளுவை யெனவே. - 27



2572 - எனக்குநீ யருளு நல்வர மொன்றஃ
        தியாதெனி னெப்பிறப் புறினுங்,
கனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்
        கற்பகா டவிநிழ லிருந்து,
மனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து
        வாழினும் வரையிடை யுதித்த,
வனக்கொடி பாகா பட்டிலிங் கேசா
        மலர்புரை நின்னடிக் கன்பே. - 28



2573 - அடிநினைந் துருகித் தொடுமணற் கேணி
        யதனினுங் கண்களூற் றெடுக்கப்,
படிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்
        பாடிடே னாடிடேன் பணியேன்,
முடிவது மறியேன் மூர்க்கனே னெனையு
        முன்னிநீ யருள்புரி வாயோ,
பொடியணி மேனிப் புண்ணியா பழசைப்
        புராதனா பூரணப் பொருளே. - 29



2574 - பொருளலா வதனைப் பொருளென மதித்துப்
        பொறிவழிப் புலன்செலப் போக்கி,
மருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்
        செய்கையு மின்றித்,
தெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ
        சையில்விருப் புடையாய்,
இருளுலா மிடற்றா யமரர்நா யகநின்
        னிணையடிக் கறாதவன் பருளே. - 30



2575 - வேறு.

அன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்
பின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே
னென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ
தென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே. - 31



2576 - மேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்
காய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்
வேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான்
தீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே. - 32



2577 - கொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து
கள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்
தெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென
துள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே. - 33



2578 - ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்
கூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட
றானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ
வானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே. - 34



2579 - அடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்
தொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட
மடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்
புடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே. - 35



2580 - பட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்
மட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே
கட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்
ஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே. - 36



2581 - அடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்
முடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை
பொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்
கொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே. - 37



2582 - எய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று
பொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்
மெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்
செய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே. - 38



2583 - ஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்
தேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே
லூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்
வானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே. - 39



2584 - இருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்
மருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்
பெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்
டிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே. - 40



2585 - வேறு.
கொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்
தண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்
புண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ
வண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே. - 41



2586 - கலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா
நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்
கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு
மிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே. - 42



2587 - இயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி
வயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்
சயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்
தயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே. - 43



2588 - சீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்
தாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்
போரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்
வாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே. - 44



2589 - என்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி
மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்
பொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா
சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே. - 45



2590 - செய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்
கையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்
பொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி
யையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே. - 46



2591 - எங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்
றிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத
பங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா
ரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே. - 47



2592 - யானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி
வேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி
னூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற
பானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே. - 48



2593 - வணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்
குணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்
பணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்
மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே. - 49



2594 - அருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்
திருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை
யுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள்
கருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே. - 50



2595 - வேறு.
படவர வணிகலம் பலிக்க லந்தலை
யுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்
விடமுண வுடையதண் மேவக் கண்டும்வா
னடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே. - 51



2596 - ஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை
யோவருங் கல்லென வுருகித் தேம்பியே
பாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்
கேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே. - 52



2597 - பேரருண் மேனியன் பிறைமு டித்தவன்
தாரணி கொன்றையன் சரும வாடையன்
பார்புகழ் பழசையன் பதக னேனையு
மோரடி யானென வுயக்கொண் டானின்றே. - 53



2598 - இன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்
பொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்
பன்றிகண் டறிவரு பழசை வாணன்றா
ளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே. - 54



2599 - என்னினி யான்பெறு மிலாப மாவது
பன்னரும் புகழுடைப் பழசை நாயகன்
பொன்னடி மலர்தலை பூணப் பெற்றது
மன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே. - 55



2600 - பெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்
சிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை
யறக்கொடி பாகனை யமரர் நாதனை
மறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே. - 56



2601 - நெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்
வெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்
பஞ்சடி கூறுடைப் பழசைநாயகன்
செஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே. - 57



2602 - பின்னிய குழன்முடிப் பேதை பாகனார்
பன்னிய மறையொலிப் பழசை வாணனார்
பொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ
ரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே. - 58



2603 - அற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்
நற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை
சற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை
மற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே. - 59



2604 - செய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்
மெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா
மையனை யன்றிமற் றவரை நாயினேன்
கையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே. - 60



2605 - வேறு.
நோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை
யாக்கும் வாய னருளும் பழசையான்
தேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்
வாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே. - 61



2606 - துன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம்
புன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே
னின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்
கன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே. - 62



2607 - வையு லாமயின் மானு நெடுங்கணார்
மையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்
பைய ராவணி பட்டிலிங் கேசவென்
னைய வுய்ய வளித்தருள் செய்வையே. - 63



2608 - செய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா
நெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே
பொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்
மெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே. - 64



2609 - மேவி ராமன் வணங்கும் விமலனார்
தேவ தேவர் சிறக்கும் பழசையார்
தாவின் மெல்லடித் தாமரை வாழுமே
தீவி னைச்சிறி யேனுட் சிலையினே. - 65



2610 - சில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை
புல்லும் பாகன் புரக்கும் பழசையான்
எல்லை யில்வினை யாவு மடியனேற்
கொல்லை நீக்கின னோரில் வியப்பிதே. - 66



2611 - இதையந் தீமெழு கென்ன வுருகுவார்
புதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்
சிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா
ருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே. - 67



2612 - ஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை
தேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்
வாடு வீரிங்கு வம்மின் பழசையைக்
கூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே. - 68



2613 - கூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்
றேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்
தோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்
காத்த ளிப்பன் கருணை வடிவனே. - 69



2614 - வடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான்
பொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா
னெடிய பாத நினைப்பவர் யாங்கணு
முடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே. - 70



2615 - வேறு.
இருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்
றொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று
துருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி
மருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே. - 71



2616 - மணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்
பணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்
பிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி
னணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே. - 72



2617 - நாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு
வாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்
றோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா
ஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே. - 73



2618 - அரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்
வரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்
தெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்
பரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே. - 74



2619 - படரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்
கடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்
றொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று
மிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே. - 75



2620 - இனிய வாசக மிதுபறி தலையிக லருகர்
முனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்
புனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே
நனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே. - 76



2621 - நாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்
தூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்
பாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி
மேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே. - 77



2622 - ஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா
ஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்
வாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்
போத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே. - 78



2623 - உன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே
பன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்
மன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச
மன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே. - 79



2624 - ஆக மாதுற வருளிய பழசையம் மானே
யேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ
போக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்
வேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே. - 80



2625 - வேறு.
விளம்புவதொன் றுளதுனக்கு மடநெஞ்சே
        கேட்டியருள் வேட்டுநின்று,
வளம்புகுநன் மணச்சோலை வளர்பழசைப்
        பெருமானை வானோ ருய்யத்,
தளம்புதிரைக் கடனஞ்ச முண்டவனைக்
        கண்டுகரந் தலைமேற் கூப்பிக்,
களம்புனையா தாடிடுவை பாடிடுவை
        யவன்றிருத்தாள் காணுமாறே. - 81



2626 - காணியிது வெனமண்ணைக் கருதியரைக்
        காணியருள் வேறுங் காணா,
தூணியைபொன் மனைமாத ரெனவுழல்வீ
        ருய்யுமா றுரைப்பக் கேண்மின்,
சேணியைகற் பகந்தாழுஞ் செழுஞ்சோலைத்
        திருப்பழசைத் தேவதேவன்,
வேணியிலொண் புனறரித்தான் றாள டைமி
        னுங்கள்வினை வீயத் தானே. - 82



2627 - வீயாத பெருவாழ்விங் கடிமைநா
        யேற்கிதனின் மேலுமுண்டோ,
வேயார்மென் றடந்தோளி யொருபாகன்
        றிருப்பழசைமேவு மையன்,
தீயார்தம் புன்சமையத் தீநெறியிற்
        செலுத்தாது தேவர் வாய்வாழ்த்,
தோயாத தன்னடிக்கே யெனைப்புகுவித்
        தாண்டதையிங் குணருங் காலே. - 83



2628 - காலனார் விழச்சினந்த கழற்காலா
        பழசைநகர்க் கடவுள் கேட்டீ,
கோலவா ளரக்கன்முடி நெரித்துமண்டோ
        தரிக்கின்பங்கொடுத்தாய் நட்புச்,
சாலவியற் பகைபாற்சென் றென்னேற்றாய்
        பொன்னனையா டனக்கென் செய்தா,
யேலவிவை கண்டலவோ வம் மையுடற்
        பாதிகொண்டா ளென்செய் வாளே. - 84



2629 - செய்யேந்துந் திருப்பழசை யெம்பிரா
        னுடையின்றிச் சென்னியோடு,
கையேந்தி யரவசைத்துச் சண்ணித்த
        நீறுகவின் புதைப்பக்காள,
மையேந்து மிடற்றொடுசென் றிடுபலியேற்
        றான் கண்ட மாயோன் மாழ்கிப்,
பையேந்து மரவல்கு லாவானேற்
        பெண் கள்மயல் பட்டிடாரே. - 85



2630 - பட்டாரு மிடையாளைப் பாகத்து
        வையாயேற் பழசை வாணா,
கட்டாருங் குழலார்நீ பலியேற்ற
        ஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,
முட்டாத மால்கொண்டா னெடுமாலா
        தலினழகு முழுதுங் கண்ணுற்,
றெட்டாமன் மலர்மாதர் முதலரம்பை
        மாதரெல்லா மிகல்செய் வாரே. - 86



2631 - செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா
        ளையை விழியாற் சினந்து சுட்டீ,
ரையிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங்
        கற்றோய்த்த வாடை கொண்டீர்,
மையிருக்கு மணிமிடற்றீர் துறவி
        யர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,
பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு
        கொண்டதென்னை புகலு வீரே. - 87



2632 - வீரமழு வலந்தரித்த பழசைநகர்ப்
        பெருமானே வெய்யோர் மேவு,
மாரலொரு மூன்றுமெரித் தம்மூவர்
        நிரயம் வீழ்ந் தாழா தாண்டாய்,
சோருமறி வுடைநாயே னின்றிருத்தா
        ளன்றியொரு துணையுங் காணேன்,
சீரருடந் தாண்டிடினுய்ந் திடுவேன்
        கை விடில்வாடித் தியங்கு வேனே. - 88



2633 - வேனில்வேள் கணைகிழிக்கப் பொறிவழிச்சென்
        மனமலைப்ப வெம்பி வாடிப்,
பானலார் கண்ணியர்வாய்ப் பட்டுழலு
        வேற் குமருள் பாலிப் பாயோ,
கானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்
        போய்க் கழுநீர் பாயுந்,
தேனவாம் பொழிற்பழசைச் சிவபுரத்
        தில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே. - 89



2634 - குன்றனைய முலைமடவாள் கூறானை
        நீறானைக் கொன்றை வேய்ந்த,
பொன்றிகழ்செஞ் சடையானை விடையானைக்
        கருமிடற்றுப் புனிதன் றன்னை,
வன்றறுகட் கூற்றொடுங்கச் சினந்தானை
        மானேந்து மலர்க்கை யானை,
கன்றுகுணி லாக்கொண்டோன் காணானைப்
        பழசைநகர்க் கண்டே னியானே. - 90



2635 - வேறு.
கண்ட பேர்க்குடன் காணு மற்புதம்
பண்ட மாடமார் பழசை வாணனார்
வண்டு லாங்குழல் வல்லி பாகனார்
தொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே. - 91



2636 - ஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்
போற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்
கூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்
பாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே. - 92



2637 - வள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்
றள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்
கொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்
பள்ள வாவிசேர் பழசை யப்பனே. - 93



2638 - அப்பு லாஞ்சடைப் பழசை யையனே
துப்பு லாமிதழ்த் தோகை பாகனே
கப்பு லாவுடல் கழிய நின்னருள்
வெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே. - 94



2639 - வேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்
பூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா
மூண்ட வென்வினை விலக முன்னினு
மீண்டுய் வேனருள் பழசை யெந்தையே. - 95



2640 - எந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்
நந்த லில்சுக நல்க வேண்டினூல்
வந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்
பந்த நான்மறைப் பழசை பாடுமே. - 96



2641 - பாட வேண்டுநின் பழசை யம்பதி
கூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்
தேட வேண்டுநின் செம்பொற் சீரடி
வீட வேண்டுமென் வினைகள் யாவுமே. - 97



2642 - வினையி லாதவன் விடையொன் றுள்ளவன்
புனைந றுங்குழற் பூவை பங்குளான்
றனைய டைந்தனன் பழசை யந்தலத்
தினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே. - 98



2643 - எய்யு மாரனை யெரித்த வீரனார்
பைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்
செய்ய தாண்மலர் சிரத் திருத்தியே
யுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே. - 99



2644 - வம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்
கைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்
றெம்மை யாளென வெளிமை யின்மைவெம்
பொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே. - 100


திருப்பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
----------------

This page was last updated on 19 may 2007.
Feel free to send corrections and comments to the .